Sunday 10 April 2016

விசித்திரம்

சற்றே விசித்திரமாகத்தான் இருக்கிறது அவன் நடை

என்றைக்கும் இல்லாது சுவற்றோரம் சாய்ந்தவாறு செல்கின்றான்

விந்தி விந்தி நடக்கிறானோ? என்பதற்கான உயரம் தெரிகிறது

தன் நிழலை முந்தி விடும் வேகம்.
அதன் பொருட்டு தெருவோரத் திண்ணைகளின் மீது அங்குமிங்கும் அடிக்கடி தாவிக் கொள்கிறான்

சற்று பொறுங்கள்!!
நான் பார்ப்பது அவன் நிழலையா? அப்படித்தான் போலும்

அதோ அவன் நிஜத்தில் எப்பொழுதும் போலவே நடந்து கொண்டிருக்கிறான்

என்னுடைய பார்வையில் விசித்திரம் கொண்டுவிட்டது அவன் நடை

Saturday 9 April 2016

புரிதலற்ற தேடல்கள்




கதவிடுக்கில் சிக்கிக் கொள்ளும் விரலைப் போல
சரிக்கும் தவறுக்குமான குறுகிய இடைவெளியில் எப்பொழுதும் சிக்கித்தவிக்கிறது மனம்

கோணல் முற்றத்து ஏழைக் கிழவனின்
வேனில் காலத்து வாட்டும் நினைவுகளாய்
கானல் கனவுகள் மனதில் பிசுபிசுக்கின்றன

புதையுண்டப் பொருளுக்கு அடையாளம் வைக்கிறான் சிதறுண்ட மணலில் சிறுவன்

கட்டற்ற வானில் சிறைகொண்ட மனதிற்கு
திக்கற்ற முகில்களின் நடுவே கறையிடுகிறேன் நான்

பளிச்சென்று எனைப்பார்த்துச் சிரித்தடங்குகிறது மின்னல்


Friday 4 November 2011

அன்பின் அவள்

உன் கற்றை சடையின்
ஒற்றை முடி
என்னை  வருட
விழித்தெழுகிறேன்

சன்னலின் ஊடே
நம் அந்தரங்கம்
எட்டிப்பார்க்கும் சூரியனின்
வெப்பம் பட்டு
மலர்ந்த உன் விழிப்பூக்களில்
நேற்றைய ஊடலின்
உறைந்த கண்ணீர்த் துளிகள்.

நெஞ்சம் கனக்கின்றது.
கோர்வையாக இல்லாமல்
உன் நினைவுகளை
உளறுகிறது மனம்


நீ
இட்டால் மட்டும்
ஒட்டாமல் வரும்
தோசை 

என்
குரலை
உயர்த்தினாலே
வியர்த்து விடும்
உன் கண்கள்

என்
தடுமாறும்
இதழ்களின் தயக்கத்தை
விடுமாறு கெஞ்சும்
உன்
மொழிகள்

என்
உடைச் சுருக்கங்கள்
உன்
முக வருத்தங்கள்

"அய்"
என்ற உன்
சிறு வியப்பில்
நான் கண்ட
உலக அதிசயங்கள்

என் கையை
இறுக பற்றியிருக்கும்
உன் கைகளில்
வியர்வைத் துளிகள்.
விடுவித்துக்கொள்ள
நான் கொண்ட முயற்சியில்
உன் கனவு கலைய
அரை நித்திரையில்
மீண்டும்
என் கையை
மார்புடன் இழுத்துக்கொண்டு
"போகாதீங்க பா"
என்னும்
உந்தன் முன்பு
என்
ஆழ்மன நியாயங்கள்
மண்டியிடுகின்றன 

மனைவி
என்றால்
ஆணாதிக்கம் தெறிக்கிறது

தாய்
என்றால்
எதிர்பார்ப்பு துளிர்க்கிறது

தோழி
என்று
தோளில் சாய்ந்து கொள்ள
மனம் விழைகிறது

திரைச்சீலையை 
இழுத்து
இரவாக்கி 
உன்னை
கட்டிக்கொண்டு
மீண்டும்
கண் அயர்கிறேன்
நான்.........


Sunday 20 March 2011

Saturday 19 March 2011

பொய்யுரைத்தல்












பாதகம் இருப்பதில்லை.
எனக்குச்
சாதகம் என்பதற்குமில்லை.
காரணமின்றி கூறுவதும் இல்லை.

என்ன செய்ய?
காணச் சகிக்கவில்லையே
இந்தப் பொய்களைக் 
காணாமல்
செத்து விழும்
மெய்களை........