Friday 4 November 2011

அன்பின் அவள்

உன் கற்றை சடையின்
ஒற்றை முடி
என்னை  வருட
விழித்தெழுகிறேன்

சன்னலின் ஊடே
நம் அந்தரங்கம்
எட்டிப்பார்க்கும் சூரியனின்
வெப்பம் பட்டு
மலர்ந்த உன் விழிப்பூக்களில்
நேற்றைய ஊடலின்
உறைந்த கண்ணீர்த் துளிகள்.

நெஞ்சம் கனக்கின்றது.
கோர்வையாக இல்லாமல்
உன் நினைவுகளை
உளறுகிறது மனம்


நீ
இட்டால் மட்டும்
ஒட்டாமல் வரும்
தோசை 

என்
குரலை
உயர்த்தினாலே
வியர்த்து விடும்
உன் கண்கள்

என்
தடுமாறும்
இதழ்களின் தயக்கத்தை
விடுமாறு கெஞ்சும்
உன்
மொழிகள்

என்
உடைச் சுருக்கங்கள்
உன்
முக வருத்தங்கள்

"அய்"
என்ற உன்
சிறு வியப்பில்
நான் கண்ட
உலக அதிசயங்கள்

என் கையை
இறுக பற்றியிருக்கும்
உன் கைகளில்
வியர்வைத் துளிகள்.
விடுவித்துக்கொள்ள
நான் கொண்ட முயற்சியில்
உன் கனவு கலைய
அரை நித்திரையில்
மீண்டும்
என் கையை
மார்புடன் இழுத்துக்கொண்டு
"போகாதீங்க பா"
என்னும்
உந்தன் முன்பு
என்
ஆழ்மன நியாயங்கள்
மண்டியிடுகின்றன 

மனைவி
என்றால்
ஆணாதிக்கம் தெறிக்கிறது

தாய்
என்றால்
எதிர்பார்ப்பு துளிர்க்கிறது

தோழி
என்று
தோளில் சாய்ந்து கொள்ள
மனம் விழைகிறது

திரைச்சீலையை 
இழுத்து
இரவாக்கி 
உன்னை
கட்டிக்கொண்டு
மீண்டும்
கண் அயர்கிறேன்
நான்.........