Sunday, 6 February 2011

தொலை(ந்த) பேச்சு

ஊருக்குத் தொலைபேசுகிறேன்

அம்மா கூறுகிறாள்
"தாத்தாவுக்கு உடல் நலம் சரியில்லை" என்று.
இயலாத பதட்டத்துடன்
"அடடே அப்படியா. இப்பொழுது பரவாயில்லையா?" நான்.

அப்பா கூறுகிறார்
"------க்கு குழந்தை பிறந்திருக்கிறது. அவ்வளவு அழகு" என்று.
செயற்கை வியப்புடன்
"ஓ. அருமை. யாரைப் போல இருக்கிறது?" நான்.

இளவல் கூறுகிறான்
"இந்த பிறந்தநாளுக்காவது நீ இங்கு இருந்திருக்கலாம். பச்" என்று.
வறண்ட சிரிப்புடன்
"அதனால் என்ன. புதுச் சட்டையில் எடுத்த புகைப்படம் அனுப்பு" நான்.

நான் கூறுகிறேன்
"இன்னும் ஆறு மாதங்கள் என் வேலை நீட்டிக்கப்படும் போல தெரிகிறது" என்று.
நீண்ட அமைதியுடன்
"ஓ அப்படியா. உன்னை இப்பொழுதே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது" அவர்கள்.




Saturday, 5 February 2011

ஒரு வார்த்தை

ஒற்றை வார்த்தையில்
உன்னை விவரிக்கச் சொன்னாய்.

யோசித்தேன்.
எனக்குக் "குழப்பம்"தான் மிஞ்சியது.


ஆட்டோக்ராப்

















     நினைத்துப் பார்த்தேன்
அன்றலர்ந்த பூவாய் நினைவுகள்

எழுத நினைத்தேன்
கண்ணீர் துளிகளாய் எழுத்துக்கள்

உறங்கத் துடித்தேன்
பிரிவுப் படுக்கையில் முட்கள்

நட்பை அழைத்தேன்
கடந்ததைக் கூறின நாட்கள்

     - கல்லூரி இறுதி நாட்களில் எழுதியது

Thursday, 3 February 2011

பெண்ணாதிக்கம்


"பொண்ணுங்க மனசு பேண்ட் சைஸ் மாதிரி
அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கும்
பசங்க மனசு சட்டை சைஸ் மாதிரி
எப்பவாவது தான் மாறும்"

அது என்னவோ வலைபதிவில் எழுத ஆரம்பித்ததில் இருந்து இது போன்ற லாஜிக் இல்லாத பல விஷயங்கள் தோன்றி இம்சிக்கின்றன. அதுவும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கும் பொழுதுதான் இவை என்னை புரட்டி புரட்டி எடுக்கிறது. இதுகாரும் பார்த்த தமிழ் சினிமாக்களின் பாதிப்பாகக்கூட இருக்கலாம். "அப்படியே இருந்தாலும் எப்படி நீ இப்படி யோசிக்கலாம்" என்று மகளிர் அணி உடனே பதறிக்கொண்டு என்னைப் பந்தாட புறப்பட வேண்டாம். நான் எழுத வருவது இதை பற்றி அல்ல.

பெண்கள். "இஞ்சினியரிங் படிப்பும் பொண்ணுங்களும் ஒன்னு. எவ்வளவு படிச்சாலும் புரியாது". சென்ற காலங்களில் பெண்களைப் பற்றி என்னிடம் கேட்டால் என்னுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும். பெண்கள் மீது ஒரு பத்தாம்பசலித்தனமான கண்ணோட்டத்தையே இந்த சமூகம் நமக்கு கொடுத்திருப்பதாக உணர்கிறேன். பெண்கள் மீதான பார்வை சற்று மேலோட்டமானதாகவும் அடிப்படை இல்லாததாகவும் இந்த சமூகம் சித்தரித்து வந்திருக்கிறது. பெண் என்றால் பரிதாபத்துக்குரியவள், வெகுளி, அடிமைப்படுத்தப்பட்டவள் என்று காலங்காலமாக ஆண்களுக்கு போதித்ததோடல்லாமல் பெண்களையும் நம்ப வைத்து மழுங்கடித்திருக்கின்றது இந்த சமூகம். உண்மை என்னவென்று சற்று ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு தவறு என்று விளங்கக்கூடும்.

இன்று பெண்களுடைய அதீத வளர்ச்சி பற்றி பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருகின்றனர். எது வளர்ச்சி? ஆணுக்கு போட்டியாய் எல்லாவற்றிலும் சரிசமமாய் விளங்குவதா வளர்ச்சி. 33 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாய் முன்னேறினால் தான் வெற்றியா?  யார் ஆணை ஒரு இலக்காக நிர்ணயித்தது? ஆணை ஜெயிப்பது தான் பெண்ணின் பிறவிப்பயன் போல இன்று பெண்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெண்ணுக்கு என்று தனித்தன்மை கிடையாதா. பெண்களுடைய தனித்தன்மைகளை பட்டியலிட்டால் ஆண் 3.3 சதவிகிதம் கூட நெருங்க மாட்டான். பெண்கள் இயங்கும் தளம் வேறு. ஆண்கள் இயங்கும் தளம் வேறு. பெண்ணும் ஆணும் அவரவர் தளத்தில் வெற்றிகரமாக இயங்க ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டுமே ஒழிய ஒருவர் தளத்தில் மற்றவர் இயங்க முற்படுவது எப்படி சரியாகும். ஆணைப் போல உடையணியலாம், வேலைகள் செய்யலாம், அரசியல் நடத்தலாம், இன்னபிறவற்றையும் செய்யலாம். ஆனால்அது குரங்கைப்பார்த்து மயில் மரத்துக்கு மரம் தாவும் முயற்சியே தவிர முன்னேற்றம் இல்லை. விபரீதம்.
 

படித்ததும் ரசித்ததும் - 1