Monday, 28 February 2011

என்னது? தாய் ஏர்வேஸ்ல ......

ஒரு சிலரை பார்த்தவுடன் பிடித்துவிடும். ஒரு சிலரை பேசியவுடன் பிடித்து விடும். ஆனால் ஒரு சிலரை மட்டும்தான் பார்த்தவுடனே "ஆஹா இவன் விவகாரமான ஆளு" னு மனதில் அலாரம் அடிக்கும். பேசிவிட்டால் "அப்பவே நெனச்சேன்"னு மனது ஒரு சபாஷ் சொல்லிவிட்டு பின்பு வருத்தப்படும். அதுவும் என்னையே தேடி வருவார்கள் போலும். சட்டென யாரையும் புறக்கணிக்காமல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடுவதால் கூட இருக்கலாம் என்று என்னை நானே நொந்து கொள்வேன்.

 இப்படித்தான் ஒருமுறை மும்பை விமானத்திற்காக லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தேன். விமானம் புறப்பட தாமதமாகும் என்று முன்பே அறிவித்திருந்தனர். தாமதம் என்றால் அதிகம் இல்லை. காலை 9 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சற்றே (?) தாமதமாக மதியம் 2 மணிக்குப் புறப்பட இருந்தது. அது ஏர் இந்தியா விமானம் என்பதால் எனக்கு வியப்பு எதுவும் இல்லை. மும்பை விமான நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்ல மாமா வருவதாக ஏற்பாடு. இப்பொழுது தாமதத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். போனில் அழைத்தால் பதிலில்லை. லேன்ட்லைனிலும் சிக்கவில்லை. ஒருவாறு கடுப்பான சூழ்நிலையில்தான் இந்த பதிவின் கதாநாயகனின் அறிமுகம். 

அவன் பெயரை நான் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அந்த வீணாகப்  போனவனின் பெயர் என் நினைவில் இல்லை. எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. என்னை இனம்கண்டுகொண்டு என்னருகில் வந்தமர்ந்தான். 
"ஹலோ" என்றான்.
நானும் "ஹாய்" என்றேன்.
"ஆர் யூ வெய்டிங் பார் தி ஏர் இந்தியா பிளைட் டு மும்பை?"
"யா"
(இனி அவன் டயலாக்குகளை தமிழிலேயே சொல்கிறேன்)
"நானும் அந்த பிளைட்கு தான் வெயிட் பண்றேன்"
"ஓஹோ" முன்பு கூறியதைப் போல் எனக்கு அப்பொழுதே அசுவாரஸ்யம் தொற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க எங்க வொர்க் பண்றீங்க?"
"விப்ரோ ல வொர்க் பண்றேன்"
"என்ன வா இருக்கீங்க?"
பன்னாட. CEO போஸ்டா தருவாங்க.
"சீனியர் டெவலப்பர்"
"யூ நோ. நான் ....... கம்பனியில ஜெனரல் மானேஜரா இருக்கேன்"
ரைட்டு. இந்த கருமத்த சொல்லி பீத்திகிறதுக்குத் தான் என்னோட வேலையப்பத்தி கேட்டியா. அடப் பரதேசி.
"ஹ்ம்ம்"
"நெக்ஸ்ட் மன்த்ல இருந்து என்ன லண்டன்ல இருந்து வேலை பாக்க சொல்லி இருக்காங்க"
"ஓ"
"வீடு எல்லாம் பாத்து ஓகே பண்ணிட்டு போறதுக்காக இப்போ லண்டன் வந்திருக்கேன்"
அடங்க்கொக்கமக்க. அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீ. கம்பனி பேர் என்ன மன்னார் & கோ வா.
"Canary Wharf ல வீடு பாத்துட்டேன்" 
ஹ்ம்ம். எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும் கட்டம் இது.
"இப்போ போய் wifeஅ கூட்டிட்டு அடுத்த மாசம் வந்திருவேன்"
நல்லா கவனிங்க. இது வரை நான் கேள்வி கேட்கவே இல்லை. அதுமட்டுமில்லாமல் உயர்ந்த பதவியில் இருப்பவர் எவரும் இப்படி சுயதம்பட்டம் அடித்து நான் பார்த்ததில்லை. இவன் எந்த வகை என்று புரியவுமில்லை. 

நான் பெரிதாக சுவாரசியம் காட்டாததை அவன் உணர்ந்தானா என்று தெரியவில்லை சுமார் ஒரு அரைமணி நேரம் எதையெதையோ கூறி தாளித்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு இடைவேளை.

பின்பு திடீரென்று "தே ஹாவ் டிஸ்பிளேடு தி கேட் நம்பர்" என்றான்.
அவன் கூறியதை நானும் ஒருமுறை சரி பார்த்து விட்டு என் அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த நண்பர் அசோக்கை எழுப்பினேன். 
அவர் எழும்பவும் ஒரு வயதான பாட்டி ஏதோ ஒரு மெஷினை அவரிடம் கொடுத்து விளம்பரப்படுத்தவும் சரியாக இருந்தது. கையகல கணினியில் விபரங்களை நிரப்பினால் ஏதோ கூப்பன் தருவதாக அந்த பாட்டி சொல்ல, அவர் அதை செய்யலானார். என்னுடன் கிளம்ப எத்தனித்த நம் கதாநாயகன் நான் அவருக்காக காத்திருப்பதை கண்டு அவனும் காத்திருந்தான். நான் சாதாரணமாக காத்திருக்க அவனோ கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு கிடைகொள்ளாமல் இருந்தான். அசோக்கிடம் கூப்பனை கொடுத்துவிட்டு அந்த பாட்டியும் நகர்ந்தது. அவர் அந்த கூப்பனைக் கொண்டு மேலும் சாக்லேட் வாங்க வேண்டுமென நகர்ந்தார். அவன் மேலும் பொறுமையிழந்து இருந்தான். 
"இசின்ட் இட் கெட்டிங் லேட்" என்றான்.
உனக்கு லேட்டானால் கிளம்ப வேண்டியதுதானே டா. அவனிடம் கேட்கவில்லை.
"எவளோ நேரம் ஆகும் கேட்டுக்கு போறதுக்கு?"
"பத்து நிமிஷம் ஆகும்"
பத்து நிமிடம் கழித்து அசோக் வந்து சேர்ந்தார். மூவரும் கேட்டை நோக்கி நடக்கலானோம். இப்பொழுது அவன் அசோக்கை அரிக்க தொடங்கியிருந்தான். எனக்கு சற்று நிம்மதி.
டாய்லட் சென்றோம். அவனும் வந்தான். 
நின்றோம். அவனும் நின்றான்.
நடந்தோம். அவனும் நடந்தான்.
அவனுக்கு கேட்டை கண்டுபிடித்து செல்ல தெரியவில்லை என்பதை உணர எனக்கு வெகுநேரமாயிற்று. 

நீண்ட வரிசையில் நின்று போர்டிங் பாஸை கிழித்து வாங்கிக்கொண்டு லவுஞ்சிற்கு வந்தோம். அசோக் அவன் எங்கு வேலை செய்கிறான் என்று கேட்டு தொலைக்க, அவன் மறு ஒளிபரப்பை தொடங்கிவிட்டிருந்தான். அவருக்கு ஏண்டா கேட்டோம் என்று தோன்றியிருப்பதை நான் உணர்ந்தேன். 
லவுஞ்சு கண்ணாடி வழியே விமானங்கள் ஓடுதளத்தில் ஓடுவதும் பறப்பதுமாக இருந்தது. அவன் என்னருகில் மறுபடியும் அமர்ந்தான். தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று மெதுவாக ஓடுதளத்தை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது.
"யூ நோ. தாய் ஏர்வேஸ்ல inflight entertainment கிடையாது" 
எனக்கு வரலாறு காணாத கோபம் அப்பொழுதுதான் பீறிட்டது. கொய்யால.
எதையாவது பேசணும்னு எத வேணும்னாலும் பேசறதா. கர்மம் என்று என் விதியை நொந்து கொண்டேன்.
"ஐயையோ இவன் நம்ம பக்கத்து சீட்டா இருந்தா" அந்த நினைப்பே வயிற்றை கலக்கியது. மெதுவாக அவன் சீட் நம்பரை விசாரித்தேன்.
"32A. யுவர்ஸ்?" என்றான்.

"சீட் நம்பர்ஸ் 40 டு 44 ப்ளீஸ் ப்ரோசீட் பார் போர்டிங்" என்று அறிவித்தார்கள். புயல் அபாயம் நீங்கிய உணர்வோடு விமான நுழைவு வாயிலை நோக்கி நான் நடந்துகொண்டிருந்தேன்.





Friday, 25 February 2011

இளையராஜா

இந்த இசை அரசனின் இசையலைகள் புரட்டிப் போட்ட கோடானு கோடி சிப்பிகளில் நானும் ஒருவன். இசை ஞானம் இல்லாதவரையும் இழுத்துத் தன்னுடன் பயணிக்க வைக்கும் அந்த சக்தி. எத்தனை பாடல்கள். அடேயப்பா. மனதின் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுண்டி இழுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள். 


இசையைப் பற்றி என்ன தெரியும் என்று என்னைக் கேட்பீர்களானால் - இளையராஜாவின் இசையை ரசிக்க நன்றாகத் தெரியும் என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த இசையைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. தத்து பித்தென்று எதையாவது எழுதிவைக்க மனம் ஒப்பவில்லை. நுணுக்கமாக எழுத எனக்கிருந்த இசைஅறிவு போதுமானதாகத் தோன்றவில்லை. எழுதாமல் விட்டது எவ்வளவு நல்லதாகிவிட்டது என்பதை கீழ்காணும் பதிவைக்கண்டவுடன் விளங்கிவிட்டது.

ரவி ஆதித்யா: இளையராஜா- King of Enchanting Violins-1

கண்டிப்பாக இவ்வளவு சிரத்தையுடன் என்னால் எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. அற்புதம். பல பாடல்களில் பொதிந்திருந்த வயலின் interlude களை அவ்வளவு அழகாக பதிவு செய்து இருக்கிறார்.
இதைப்படித்தவுடன் சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அதைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தான் இந்த பதிவு.

சிறுவயது தொட்டு திரையிசையை ரசித்து வருபவன் தான். இருப்பினும் சமீபகாலமாக அயல்நாடு தந்த தனிமை, இசையுடன் இன்னும் நெருங்கி உலா வர வாய்ப்பாக அமைந்தது. வீட்டில் பெரிய ஸ்பீக்கர்களில் கேட்கும் பொழுது புலப்படாத பல நுணுக்கமான இசைகளை ஹெட் போனில் கேட்கும் பொழுது தான் ரசிக்க முடிந்தது. அதுவும் நம் இளையராஜாவின் இசை என்றால் ஆங்காங்கே சிறு சிறு இசைத்துணுக்குகள் ஒளிந்திருக்கும். அமைதியான இரவுகளில் இளையராஜாவின் இசை தரும் சுகத்தை உணர மட்டும்தான் முடியும். அப்படி ஊன்றி கவனிக்கும் பொழுதுதான் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை உணரமுடியும். அந்த வேறுபாட்டில் ஒன்று தான் ரவி அவர்கள் பதிவில் விவரிக்கப்பட்டிருக்கும் வயலின் உபயோகம். இளையராஜாவின் இசைக்கோர்வை (music composition) அவரின் மற்றொரு தனித்தன்மை.



இசைக்கோர்வையை விமர்சிக்கும் அளவுக்கு அறிவு போதாது எனினும், இளையராஜா இசைக்கும் மற்ற இசையமைப்பாளர்கள் இசைக்கும் உள்ள வேறுபாட்டை எப்படியோ என்னால் இனம்காண முடிகிறது. இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? இருக்கலாம். உதாரணமாக இதுநாள் வரையில் இளையராஜா இசையமைத்ததாக நம்பப்பட்டு வந்த பல பிரபலமான பாடல்கள் வேறு இசையமைப்பாளர்களுடையது என்பதை தனித்துவம் வாய்ந்த இசைக்கோர்வையோ இல்லை ஏதோ ஒன்று எனக்கு உணர்த்திற்று.

80 களிலும் 90 களிலும் வெளிவந்து வெற்றி பெற்ற எல்லாப்பாடல்களுமே இளையராஜாவினுடையது தான் என்று பலர் உட்பட நானும் நம்பியிருந்தேன். 

இதயத்தாமரை படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் இளையராஜாவினுடையது அல்ல என்று எனக்கு உணர்த்தியது எதுவென்று தெரியவில்லை. விசாரித்துப் பார்த்ததில் சங்கர்-கணேஷாம்.



அதேபோல் 
இந்தப் பாடல் சந்திரபோஸ் இசையமைத்தது.

மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இந்த பாடலுக்கு இசை தேவேந்திரன்.

இப்படிப்பல பாடல்கள். மேற்குறிப்பிட்ட பாடல்களில் எந்த குறையும் இல்லை. இளையராஜாவின் டச் இல்லை என்பதே நான் உணர்ந்தது. ஒருமுறை இளையராஜா குறிப்பிட்டார் -  "இசை என்பது ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதியதாய் தோன்ற வேண்டும்" என்று. எவ்வளவு உண்மை. இதுதான் இளையராஜாவின் அந்த டச். வெறும் ரயில் சிநேகமாய் முடிந்து போகாமல் உற்ற நண்பனைப் போன்றது இளையராஜாவின் பாடல்கள்.

எந்த சூழலிலும் நம்மை ஆட்கொள்ளும் இசையைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அனைவரும் அறிந்த ஒன்றை மீண்டும் வழிமொழிகிறேன்.

Sunday, 20 February 2011

சிறு பிள்ளாய்

காய்ந்தச் சருகின் மேல் 
தங்கச் சிறகைப் போல்
என் மடியினில்
உறங்கும் பிள்ளாய்

உன்
கருவிழிகள்
இரு பிறைநிலவுகளுக்குள்
துஞ்சுவதை
கண்சிமிட்டாமல்
படம் பிடிக்கிறேன்

மொட்டு அவிழ்வதைப்
போல
பட்டு இதழ் விரிக்கிறாய்
கனவு காண்கிறாயோ?
உன் கனவு உலகத்திற்குள் 
நானும் விரைகிறேன்

என் சுற்றம்
தொலைந்து போகிறது
என் யாக்கை
உயிர்ப் பிரிகிறது
அவ்வுயிர்
மெல்ல அலைகிறது 

உடல் நெளிக்கிறாய்
உன் கனவு
கலையாதிருக்க
நான்
சிலையாகிறேன்

முகம் சுழிக்கிறாய்
அதனின்று
ஆயிரம் கவிதைகள்
தெறித்து விழுகிறது

உன் விரல்களால்
காற்றை அளாவுகிறாய்
அவ்வோசை
இசையாகிறது

உனக்கு வலிக்காமல்
ஒரு பொய் முத்தம்
பதிக்கிறேன்

இந்தக் கணம்
உடனே
உறைந்து விடாதா?
உன்
உறக்கத்தினுள்
நான்
கரைந்துவிட.....


Saturday, 19 February 2011

பிரியாவிடை

இனிக்கின்ற நினைவுகளும் கனக்கின்ற நாளிது
உளம்வென்ற நட்பினையும் பிரிக்கின்ற நாளிது
ஒளிநின்றக் கண்களிலும் வியர்க்கின்ற நாளிது
பிரிவென்ற பெருந்துயரம் களம்வென்ற நாளிது




விடைபெறும் நேரம்
எதிர்நோக்கவில்லை நாமும்
படித்த பாடங்கள் கண்ணீரில் கரைந்து விட 
பேசிய வார்த்தைகள் மனதிற்குள்ப் புதைந்து விட
சிரித்த சிரிப்பொலிகள் வகுப்பறையில் எதிரொலிக்க
இன்புற்றத் தருணங்கள் கண்மணிக்குள் புதைந்து விட
பிரிந்து செல்கின்றோம் 
நினைவுகளின் வலிகளோடு.....

                                                          ---- கல்லூரியின் கடைசி நாளன்று எழுதியது

படித்ததும் ரசித்ததும் - 3