Sunday 13 March 2011

நாட்குறிப்பு - மார்ச் 12

நாட்குறிப்பு எழுத வலைப்பதிவை உபயோகப்படுத்துவதா என்று தோன்றியபோதிலும், எதை எழுதுவது என்று தெரியாமல் எதையாவது எழுதிவிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டதால் இன்றையக் குறிப்புகள் பின்வருமாறு.

வரலாற்றில் முக்கியமானதொரு தினம் இன்று. இதை பதிவு செய்யாவிடில் நான் தேசத்திரோகியாக கருதப்படும் அபாயம் இருக்கிறது. ஆகையால் கிரிக்கட்டைப் பற்றி முதலில் பேசி விடுகிறேன். இன்றைய ஆட்டத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் "ஆகா என்னமா ஆடுறாங்க" என்று சிலாகித்து, "நல்லாத்தான போயிக்கிட்டிருந்தது" என்று பரிதவித்து, "ச்சே. இவனுங்க ஆரம்பமெல்லாம் அமர்க்களமா இருந்தும் பினிஷிங் சரியில்லையே" என்ற வருத்தத்துடன் முடிந்தது.

இன்று கோகுலுடனும் ஜித்துவுடனும் வெப் காமரா மூலம் அளவளாவியதில் பெருமகிழ்ச்சி. மூவரும் இவ்வாறு பேசி வெகுநாட்கள் ஆகிவிட்டிருந்தது. சிரித்து சிரித்து வயிறும் வலித்தது. இன்பமான வலி. கடந்த, நிகழ், வருங்காலம் என்று அனைத்தையும் பேசி, கிண்டல் கேலி என விலா நோக சிரித்து, அப்பப்பா பத்து வருடங்கள் பின்னோக்கி வாழ்ந்த அனுபவம். கோகுல் வீட்டு மாடி, ஜித்துவின் அறை, என் வீட்டு பலகணியில் பேசிய பேச்சுக்கள், மகாராணி அவின்யு மைதானத்தில் நாங்கள் மூவர் விளையாடிய கிரிக்கட், பெங்களூர் ஹொசா ரோடு வீடு, பனசங்கரி வீட்டு நாட்கள் என்று அனைத்தும் திரும்ப ஒரு முறை மனதின் விளிம்புகளை தழுவிச்சென்றது போன்றதொரு அனுபவம். ஜித்துவின் காலை வாருவது, பழைய நினைவுகளை கிளறுவது, புதிய உறவுகளை இணைப்பது என்று காலம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். காலம் ஆகஆக பதமாகும் மதுவைப்போல நட்பும் பலப்பட்டுகொண்டே செல்கிறது. அந்த காலங்கள் திரும்ப கிடைக்காதா என்று மனம் ஏங்குகிறது. எப்படி இணைந்தோம்? எப்படி வளர்ந்த நட்பு? தெரியவில்லை. பிணக்குகளைத் தாண்டி இன்றும் வளர்கிறது. இன்னும் வளர்ப்போம். 

பள்ளிப்பருவ நண்பனுடன் இன்று இரவு உணவு. இங்குள்ள பல்கலையில் உளவியல் துறையில் படிக்கிறான். அவனுடன் நடந்த உரையாடல் இன்றைய நாளை நிறைவு செய்தது. விஷயம் ஒன்றுமில்லை. எங்கெங்கோ சென்ற பேச்சு, திருமணம் குறித்து திரும்பியது. திருமண வயதொத்தவர்கள் என்பதால் வியப்பு ஒன்றும் இல்லை. பெண்ணை நேரில் சந்தித்து பேசாமல் ஒப்புக்கொள்வது சரியான விஷயம் அல்ல என்பது அவனது கருத்து. நமது அலைவரிசைக்கு ஒரு பெண் ஒற்றுப்போவாளா இல்லையா என்பதை அவளை சந்தித்து பேசி பழகிய பின்புதான் தெரிந்துகொள்ள முடியும் என்றான் அவன். உண்மைதான். இது காதலித்து திருமணம் புரியும் பட்சத்தில் சாத்தியமான விஷயம். அனால் நம்மால் அமைக்கப்படுகின்ற ie. arranged marriage (பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை) திருமணத்தில் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற உரையாடல் நீண்டது. 
என்னைப் பொறுத்தவரையில் நம்மால் அமைக்கப்படுகின்ற திருமணத்தில் அதிகபட்சம் பெண்ணிடம் அரைமணியில் இருந்து ஒரு மணி வரை பேசலாம். பிடித்திருக்கிறதா என்று கேட்கலாம். நேர்காணல் போன்று கேள்விகளை விடுக்கலாம். பதில்களை பெறலாம். எல்லாம் சரி. அதன் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற பெண்ணிடம் வருங்காலத்தில் எந்த பிரச்சனையும் வராது என்பதில் என்ன நிச்சயம். ஏன், வருடக்கணக்கில் காதலித்து மனமுடிப்பவர்களுக்கு சண்டையே வருவதில்லையா? ஆக. ஒரு பெண்ணை நேர்காணல் செய்து வேலைக்கு ஆள் எடுப்பது போல் திருமணம் முடிப்பதில் ஒரு பலனும் இல்லை. எதிர்பார்ப்பு. நம் எதிர்பார்ப்பு மிகுந்த குறிப்புடனும், வரையறுக்கப்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில் சிக்கல் என்பது வந்தே தீரும். இது எந்த விதமான திருமணத்திற்கும் பொருந்தும். திறந்த மனதுடன் விட்டுக்கொடுத்து செல்கின்ற மனப்பக்குவம் இருக்குமானால் ஒரு பெண்ணை அவள் சார்ந்த குடும்பத்தின் அழகைக் கொண்டே ஒப்புக்கொள்ள முடியும். எதிர்பார்ப்புக்கு தகுந்த பெண்ணை மணமுடிப்பது என்பது ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு மத்தியில் நம்மை கவர்ந்த வீட்டினை வாங்குவது போன்றது. திறந்த மனதுடன் மணமுடிப்பதென்பது   நமக்கு விருப்பமான ஒரு வீட்டை நாமாக கட்டிக்கொள்வதைப் போன்றது.
இதை என் உளவியல்கார நண்பனிடம் கூறி முடிக்கும் பொழுது அவன் அரைமனதுடன் தலையசைத்து விட்டுச் சென்றான். அவனை தத்துவார்த்தமாக குழப்பிய சந்தோஷத்துடன் நான் வீடு வந்து சேர்ந்தேன்.

No comments:

Post a Comment