Monday 28 February 2011

என்னது? தாய் ஏர்வேஸ்ல ......

ஒரு சிலரை பார்த்தவுடன் பிடித்துவிடும். ஒரு சிலரை பேசியவுடன் பிடித்து விடும். ஆனால் ஒரு சிலரை மட்டும்தான் பார்த்தவுடனே "ஆஹா இவன் விவகாரமான ஆளு" னு மனதில் அலாரம் அடிக்கும். பேசிவிட்டால் "அப்பவே நெனச்சேன்"னு மனது ஒரு சபாஷ் சொல்லிவிட்டு பின்பு வருத்தப்படும். அதுவும் என்னையே தேடி வருவார்கள் போலும். சட்டென யாரையும் புறக்கணிக்காமல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடுவதால் கூட இருக்கலாம் என்று என்னை நானே நொந்து கொள்வேன்.

 இப்படித்தான் ஒருமுறை மும்பை விமானத்திற்காக லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தேன். விமானம் புறப்பட தாமதமாகும் என்று முன்பே அறிவித்திருந்தனர். தாமதம் என்றால் அதிகம் இல்லை. காலை 9 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சற்றே (?) தாமதமாக மதியம் 2 மணிக்குப் புறப்பட இருந்தது. அது ஏர் இந்தியா விமானம் என்பதால் எனக்கு வியப்பு எதுவும் இல்லை. மும்பை விமான நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்ல மாமா வருவதாக ஏற்பாடு. இப்பொழுது தாமதத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். போனில் அழைத்தால் பதிலில்லை. லேன்ட்லைனிலும் சிக்கவில்லை. ஒருவாறு கடுப்பான சூழ்நிலையில்தான் இந்த பதிவின் கதாநாயகனின் அறிமுகம். 

அவன் பெயரை நான் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அந்த வீணாகப்  போனவனின் பெயர் என் நினைவில் இல்லை. எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. என்னை இனம்கண்டுகொண்டு என்னருகில் வந்தமர்ந்தான். 
"ஹலோ" என்றான்.
நானும் "ஹாய்" என்றேன்.
"ஆர் யூ வெய்டிங் பார் தி ஏர் இந்தியா பிளைட் டு மும்பை?"
"யா"
(இனி அவன் டயலாக்குகளை தமிழிலேயே சொல்கிறேன்)
"நானும் அந்த பிளைட்கு தான் வெயிட் பண்றேன்"
"ஓஹோ" முன்பு கூறியதைப் போல் எனக்கு அப்பொழுதே அசுவாரஸ்யம் தொற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க எங்க வொர்க் பண்றீங்க?"
"விப்ரோ ல வொர்க் பண்றேன்"
"என்ன வா இருக்கீங்க?"
பன்னாட. CEO போஸ்டா தருவாங்க.
"சீனியர் டெவலப்பர்"
"யூ நோ. நான் ....... கம்பனியில ஜெனரல் மானேஜரா இருக்கேன்"
ரைட்டு. இந்த கருமத்த சொல்லி பீத்திகிறதுக்குத் தான் என்னோட வேலையப்பத்தி கேட்டியா. அடப் பரதேசி.
"ஹ்ம்ம்"
"நெக்ஸ்ட் மன்த்ல இருந்து என்ன லண்டன்ல இருந்து வேலை பாக்க சொல்லி இருக்காங்க"
"ஓ"
"வீடு எல்லாம் பாத்து ஓகே பண்ணிட்டு போறதுக்காக இப்போ லண்டன் வந்திருக்கேன்"
அடங்க்கொக்கமக்க. அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீ. கம்பனி பேர் என்ன மன்னார் & கோ வா.
"Canary Wharf ல வீடு பாத்துட்டேன்" 
ஹ்ம்ம். எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும் கட்டம் இது.
"இப்போ போய் wifeஅ கூட்டிட்டு அடுத்த மாசம் வந்திருவேன்"
நல்லா கவனிங்க. இது வரை நான் கேள்வி கேட்கவே இல்லை. அதுமட்டுமில்லாமல் உயர்ந்த பதவியில் இருப்பவர் எவரும் இப்படி சுயதம்பட்டம் அடித்து நான் பார்த்ததில்லை. இவன் எந்த வகை என்று புரியவுமில்லை. 

நான் பெரிதாக சுவாரசியம் காட்டாததை அவன் உணர்ந்தானா என்று தெரியவில்லை சுமார் ஒரு அரைமணி நேரம் எதையெதையோ கூறி தாளித்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு இடைவேளை.

பின்பு திடீரென்று "தே ஹாவ் டிஸ்பிளேடு தி கேட் நம்பர்" என்றான்.
அவன் கூறியதை நானும் ஒருமுறை சரி பார்த்து விட்டு என் அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த நண்பர் அசோக்கை எழுப்பினேன். 
அவர் எழும்பவும் ஒரு வயதான பாட்டி ஏதோ ஒரு மெஷினை அவரிடம் கொடுத்து விளம்பரப்படுத்தவும் சரியாக இருந்தது. கையகல கணினியில் விபரங்களை நிரப்பினால் ஏதோ கூப்பன் தருவதாக அந்த பாட்டி சொல்ல, அவர் அதை செய்யலானார். என்னுடன் கிளம்ப எத்தனித்த நம் கதாநாயகன் நான் அவருக்காக காத்திருப்பதை கண்டு அவனும் காத்திருந்தான். நான் சாதாரணமாக காத்திருக்க அவனோ கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு கிடைகொள்ளாமல் இருந்தான். அசோக்கிடம் கூப்பனை கொடுத்துவிட்டு அந்த பாட்டியும் நகர்ந்தது. அவர் அந்த கூப்பனைக் கொண்டு மேலும் சாக்லேட் வாங்க வேண்டுமென நகர்ந்தார். அவன் மேலும் பொறுமையிழந்து இருந்தான். 
"இசின்ட் இட் கெட்டிங் லேட்" என்றான்.
உனக்கு லேட்டானால் கிளம்ப வேண்டியதுதானே டா. அவனிடம் கேட்கவில்லை.
"எவளோ நேரம் ஆகும் கேட்டுக்கு போறதுக்கு?"
"பத்து நிமிஷம் ஆகும்"
பத்து நிமிடம் கழித்து அசோக் வந்து சேர்ந்தார். மூவரும் கேட்டை நோக்கி நடக்கலானோம். இப்பொழுது அவன் அசோக்கை அரிக்க தொடங்கியிருந்தான். எனக்கு சற்று நிம்மதி.
டாய்லட் சென்றோம். அவனும் வந்தான். 
நின்றோம். அவனும் நின்றான்.
நடந்தோம். அவனும் நடந்தான்.
அவனுக்கு கேட்டை கண்டுபிடித்து செல்ல தெரியவில்லை என்பதை உணர எனக்கு வெகுநேரமாயிற்று. 

நீண்ட வரிசையில் நின்று போர்டிங் பாஸை கிழித்து வாங்கிக்கொண்டு லவுஞ்சிற்கு வந்தோம். அசோக் அவன் எங்கு வேலை செய்கிறான் என்று கேட்டு தொலைக்க, அவன் மறு ஒளிபரப்பை தொடங்கிவிட்டிருந்தான். அவருக்கு ஏண்டா கேட்டோம் என்று தோன்றியிருப்பதை நான் உணர்ந்தேன். 
லவுஞ்சு கண்ணாடி வழியே விமானங்கள் ஓடுதளத்தில் ஓடுவதும் பறப்பதுமாக இருந்தது. அவன் என்னருகில் மறுபடியும் அமர்ந்தான். தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று மெதுவாக ஓடுதளத்தை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது.
"யூ நோ. தாய் ஏர்வேஸ்ல inflight entertainment கிடையாது" 
எனக்கு வரலாறு காணாத கோபம் அப்பொழுதுதான் பீறிட்டது. கொய்யால.
எதையாவது பேசணும்னு எத வேணும்னாலும் பேசறதா. கர்மம் என்று என் விதியை நொந்து கொண்டேன்.
"ஐயையோ இவன் நம்ம பக்கத்து சீட்டா இருந்தா" அந்த நினைப்பே வயிற்றை கலக்கியது. மெதுவாக அவன் சீட் நம்பரை விசாரித்தேன்.
"32A. யுவர்ஸ்?" என்றான்.

"சீட் நம்பர்ஸ் 40 டு 44 ப்ளீஸ் ப்ரோசீட் பார் போர்டிங்" என்று அறிவித்தார்கள். புயல் அபாயம் நீங்கிய உணர்வோடு விமான நுழைவு வாயிலை நோக்கி நான் நடந்துகொண்டிருந்தேன்.





Friday 25 February 2011

இளையராஜா

இந்த இசை அரசனின் இசையலைகள் புரட்டிப் போட்ட கோடானு கோடி சிப்பிகளில் நானும் ஒருவன். இசை ஞானம் இல்லாதவரையும் இழுத்துத் தன்னுடன் பயணிக்க வைக்கும் அந்த சக்தி. எத்தனை பாடல்கள். அடேயப்பா. மனதின் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுண்டி இழுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள். 


இசையைப் பற்றி என்ன தெரியும் என்று என்னைக் கேட்பீர்களானால் - இளையராஜாவின் இசையை ரசிக்க நன்றாகத் தெரியும் என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த இசையைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. தத்து பித்தென்று எதையாவது எழுதிவைக்க மனம் ஒப்பவில்லை. நுணுக்கமாக எழுத எனக்கிருந்த இசைஅறிவு போதுமானதாகத் தோன்றவில்லை. எழுதாமல் விட்டது எவ்வளவு நல்லதாகிவிட்டது என்பதை கீழ்காணும் பதிவைக்கண்டவுடன் விளங்கிவிட்டது.

ரவி ஆதித்யா: இளையராஜா- King of Enchanting Violins-1

கண்டிப்பாக இவ்வளவு சிரத்தையுடன் என்னால் எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. அற்புதம். பல பாடல்களில் பொதிந்திருந்த வயலின் interlude களை அவ்வளவு அழகாக பதிவு செய்து இருக்கிறார்.
இதைப்படித்தவுடன் சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அதைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தான் இந்த பதிவு.

சிறுவயது தொட்டு திரையிசையை ரசித்து வருபவன் தான். இருப்பினும் சமீபகாலமாக அயல்நாடு தந்த தனிமை, இசையுடன் இன்னும் நெருங்கி உலா வர வாய்ப்பாக அமைந்தது. வீட்டில் பெரிய ஸ்பீக்கர்களில் கேட்கும் பொழுது புலப்படாத பல நுணுக்கமான இசைகளை ஹெட் போனில் கேட்கும் பொழுது தான் ரசிக்க முடிந்தது. அதுவும் நம் இளையராஜாவின் இசை என்றால் ஆங்காங்கே சிறு சிறு இசைத்துணுக்குகள் ஒளிந்திருக்கும். அமைதியான இரவுகளில் இளையராஜாவின் இசை தரும் சுகத்தை உணர மட்டும்தான் முடியும். அப்படி ஊன்றி கவனிக்கும் பொழுதுதான் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை உணரமுடியும். அந்த வேறுபாட்டில் ஒன்று தான் ரவி அவர்கள் பதிவில் விவரிக்கப்பட்டிருக்கும் வயலின் உபயோகம். இளையராஜாவின் இசைக்கோர்வை (music composition) அவரின் மற்றொரு தனித்தன்மை.



இசைக்கோர்வையை விமர்சிக்கும் அளவுக்கு அறிவு போதாது எனினும், இளையராஜா இசைக்கும் மற்ற இசையமைப்பாளர்கள் இசைக்கும் உள்ள வேறுபாட்டை எப்படியோ என்னால் இனம்காண முடிகிறது. இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? இருக்கலாம். உதாரணமாக இதுநாள் வரையில் இளையராஜா இசையமைத்ததாக நம்பப்பட்டு வந்த பல பிரபலமான பாடல்கள் வேறு இசையமைப்பாளர்களுடையது என்பதை தனித்துவம் வாய்ந்த இசைக்கோர்வையோ இல்லை ஏதோ ஒன்று எனக்கு உணர்த்திற்று.

80 களிலும் 90 களிலும் வெளிவந்து வெற்றி பெற்ற எல்லாப்பாடல்களுமே இளையராஜாவினுடையது தான் என்று பலர் உட்பட நானும் நம்பியிருந்தேன். 

இதயத்தாமரை படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் இளையராஜாவினுடையது அல்ல என்று எனக்கு உணர்த்தியது எதுவென்று தெரியவில்லை. விசாரித்துப் பார்த்ததில் சங்கர்-கணேஷாம்.



அதேபோல் 
இந்தப் பாடல் சந்திரபோஸ் இசையமைத்தது.

மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இந்த பாடலுக்கு இசை தேவேந்திரன்.

இப்படிப்பல பாடல்கள். மேற்குறிப்பிட்ட பாடல்களில் எந்த குறையும் இல்லை. இளையராஜாவின் டச் இல்லை என்பதே நான் உணர்ந்தது. ஒருமுறை இளையராஜா குறிப்பிட்டார் -  "இசை என்பது ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதியதாய் தோன்ற வேண்டும்" என்று. எவ்வளவு உண்மை. இதுதான் இளையராஜாவின் அந்த டச். வெறும் ரயில் சிநேகமாய் முடிந்து போகாமல் உற்ற நண்பனைப் போன்றது இளையராஜாவின் பாடல்கள்.

எந்த சூழலிலும் நம்மை ஆட்கொள்ளும் இசையைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அனைவரும் அறிந்த ஒன்றை மீண்டும் வழிமொழிகிறேன்.

Sunday 20 February 2011

சிறு பிள்ளாய்

காய்ந்தச் சருகின் மேல் 
தங்கச் சிறகைப் போல்
என் மடியினில்
உறங்கும் பிள்ளாய்

உன்
கருவிழிகள்
இரு பிறைநிலவுகளுக்குள்
துஞ்சுவதை
கண்சிமிட்டாமல்
படம் பிடிக்கிறேன்

மொட்டு அவிழ்வதைப்
போல
பட்டு இதழ் விரிக்கிறாய்
கனவு காண்கிறாயோ?
உன் கனவு உலகத்திற்குள் 
நானும் விரைகிறேன்

என் சுற்றம்
தொலைந்து போகிறது
என் யாக்கை
உயிர்ப் பிரிகிறது
அவ்வுயிர்
மெல்ல அலைகிறது 

உடல் நெளிக்கிறாய்
உன் கனவு
கலையாதிருக்க
நான்
சிலையாகிறேன்

முகம் சுழிக்கிறாய்
அதனின்று
ஆயிரம் கவிதைகள்
தெறித்து விழுகிறது

உன் விரல்களால்
காற்றை அளாவுகிறாய்
அவ்வோசை
இசையாகிறது

உனக்கு வலிக்காமல்
ஒரு பொய் முத்தம்
பதிக்கிறேன்

இந்தக் கணம்
உடனே
உறைந்து விடாதா?
உன்
உறக்கத்தினுள்
நான்
கரைந்துவிட.....


Saturday 19 February 2011

பிரியாவிடை

இனிக்கின்ற நினைவுகளும் கனக்கின்ற நாளிது
உளம்வென்ற நட்பினையும் பிரிக்கின்ற நாளிது
ஒளிநின்றக் கண்களிலும் வியர்க்கின்ற நாளிது
பிரிவென்ற பெருந்துயரம் களம்வென்ற நாளிது




விடைபெறும் நேரம்
எதிர்நோக்கவில்லை நாமும்
படித்த பாடங்கள் கண்ணீரில் கரைந்து விட 
பேசிய வார்த்தைகள் மனதிற்குள்ப் புதைந்து விட
சிரித்த சிரிப்பொலிகள் வகுப்பறையில் எதிரொலிக்க
இன்புற்றத் தருணங்கள் கண்மணிக்குள் புதைந்து விட
பிரிந்து செல்கின்றோம் 
நினைவுகளின் வலிகளோடு.....

                                                          ---- கல்லூரியின் கடைசி நாளன்று எழுதியது

படித்ததும் ரசித்ததும் - 3

Monday 14 February 2011

பிப்ரவரி 14

அன்று பிப்ரவரி 14. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு. வீட்டில் தனியாக நான். சன் டிவியில் காதலர் தின சிறப்பு திரைப்படமாக "காதலன்" திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. சுமார் மாலை நான்கு மணிக்கு திடீரென்று ஒரு ப்ளாஷ் நியூஸ். முதலில் நான் அதை கவனிக்கவில்லை. சட்டென்று "குண்டு வெடிப்பு" என்றும் "கோவை" என்றும் வார்த்தைகள் தென்பட நான் சற்று பரபரப்பானேன்.  அம்மாவும் மூன்று வயது தம்பியும் அந்த மாலையில் தான் பாட்டி வீட்டிலிருந்து திரும்ப வர வேண்டும். அப்பாவோ அன்று சனிக்கிழமையாதலால் அரைநாள் வேலை முடிந்து  நாமக்கல்லிலிருந்து வார இறுதிக்காக  வீடு வரவேண்டிய நாள். இவையனைத்தும் என் மூளைக்குள் ப்ளாஷ் நியூசாக ஓட எனக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. டிவியில் திடீர் செய்திகள் ஒளிபரப்பப்பட்டு "குண்டு வெடித்தது R.S .புரத்தில் மட்டுமல்ல" என்று கூறி இடங்களை பட்டியலிட ஆரம்பித்து என் பரபரப்பை படபடப்பாக்கினர்.

செய்வதற்கு ஒன்றுமில்லை. காத்திருப்பு. யாராவது ஏதாவது தகவல் தரமாட்டார்களா என்று மனம் அடித்துக்கொண்டது. வெளியில் ஓடினேன். யாரேனும் டவுனிலிருந்து வந்தால் நிலவரம் என்ன என்பதை அறியலாம் என்று காத்திருந்தேன். அம்மாவுடன் பணிபுரியும் இருவர் நடந்து வந்துகொண்டிருந்தனர். யார் என்று நினைவில்லை.

"அங்கிள்... டவுனுக்குள்ள எப்படி இருக்கு அங்கிள்". பொத்தாம்பொதுவாக நான் கேட்க அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 "ஏன் என்ன ஆச்சு?" என்றார்கள்.

சரி அவர்களுக்கு இன்னும் செய்தி எட்டவில்லை போலும். எனக்கு சப்பென்று ஆனது.

"R.S. புரத்துல குண்டு வெடிப்புன்னு நியூஸ் வந்துது அங்கிள்" என்றேன்.
"அம்மாவும் தம்பியும் பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க. இப்போ திரும்பி வர்ற நேரம். அதான் என்ன ஆச்சுனு தெரியல அங்கிள்" குரல் சற்று உடைந்து விட்டிருந்தது.
 நான் கூறியதை அவர்கள் அதிகம் சட்டை பண்ணியதாக தெரியவில்லை. அநேகமாக என் பரபரப்பு அவர்களை தொற்றியிருக்க வேண்டும். அதை நான் சட்டை செய்யவில்லை.

சம்பிரதாயத்துக்கு "ஒன்னும் பயப்படாத கவின். வந்துருவாங்க" என்று கூறிவிட்டு அவர்கள் வீடு நோக்கி பயணித்தனர்.

நான் மறுபடியும் வீட்டினுள் ஓடி வந்து வேறு ஏதாவது தகவல் இருக்குமா என்று டிவியில் பார்க்கிறேன். இப்பொழுது சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர். எனக்கோ சம்பந்தமில்லாமல் பல கற்பனைகள் மனதை அரித்தன. "ச்சே. ஒன்னும் இருக்காது டா" என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

கிடை கொள்ளாமல் வீட்டினுள் சற்று நேரம் வெளியில் சற்று நேரம் என்று உலவினேன். யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது. வீட்டைப் பூட்டிக்கொண்டு அருகிலிருந்த மூர்த்தி அண்ணனின் இஸ்திரி கடைக்கு விரைந்தேன். வானம் இருட்டிவிட துவங்கி இருந்தது. அங்கும் சன் டிவி தான் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே காட்சிகள்.
"என்ன கவின். நியூஸ் பாத்தியா" என்றார்.
"ஆமா ணா. அம்மாவும் தம்பியும் வேற சிங்காநல்லூர் போயிருக்காங்க. எப்படி வருவாங்க னு தெரியல ணா".
அழ வேண்டும் போல இருந்தது. அடக்கிக்கொண்டேன். என் வாடிய முகத்தைக் கண்டதும் அவருக்கும் சற்று சங்கடமாகி இருக்க வேண்டும். சற்று நேர மௌனம். "ஒன்னும் பிரச்சினை இருக்காது கவின்" அதற்கு மேல் அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"அப்பா எப்படி வருவாரோ" அடுத்த பதட்டம்.
"போன் ஏதாவது வந்துதா?"
"இல்ல ணா."
"அங்க பாட்டி வீட்டு பக்கத்துல யார் வீட்டிலையாவது போன் இருக்கா?"
"இருக்கு ணா. ஆனா என்கிட்டே நம்பர் இல்லை" இதையெல்லாம் வாங்கி வைக்க வேண்டும் என எனக்கு ஏன் தோன்றவில்லை. என்னை கடிந்து கொண்டேன். சரி அம்மாவாவது போன் பண்ணி சொல்லலாமில்ல. அம்மா மீதும் கோபம் வந்தது.
"அய்யய்யோ. இப்போ யாராவது போன் பண்ணினா. அண்ணா நான் வீட்டுக்கு போறேன்"
மறுபடியும் வீடு.
போனின் மீது என் பார்வை படிந்து கிடந்தது. பெரியம்மாவுக்கு போன் பண்ணி நம்பர் கேட்டா என்ன. போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. மாய்ந்து மாய்ந்து மறுபடி மறுபடி டயல் செய்கிறேன். ஹ்ம்ம். பயனில்லை.
காத்திருப்பு.
செய்தி சொல்லி மாய்ந்து போனவர்கள் மீண்டும் காதலன் திரைப்படத்தை ஓடவிட்டனர். கண்கள் டிவியிலும், காது டெலிபோனிலும், மனது அம்மாவின் மீதும் இருந்தது. சுமார் ஒருமணி நேரம் அப்படி அமர்ந்திருப்பேன் என்று நினைவு.

வாசலில் TVS 50 யின் அரவம். சடாரென்று வெளியில் துள்ளி ஓடினேன். அங்கே அம்மாவும் தம்பியும் உடன் நடராஜ் மாமாவும் வண்டியிலிருந்து இறங்கினர். அதுவரை துடிக்க மறந்த இதயம் உயிர் பெற்று வேகவேகமாக துடித்தது. அழுகை சிரிப்பு என கலந்து ஒரு விதமான மனநிலை.
"அண்ணா" என்று மழலையாய்ச் சிரித்தான் பிரவின். அப்படியே ஓடிச்சென்று தம்பியை வாங்கி முத்தம் கொஞ்சிவிட்டு அம்மாவை கட்டிக்கொண்டேன். "எப்படிமா வந்தீங்க" தழுதழுத்தது குரல்.
"மாமா வந்தாங்க சாமி. மாமா கூட்டிட்டு வந்ததுனால ஆச்சு"
ஏன் போன் பண்ணல என்று ஏனோ கேட்க தோன்றவில்லை.
மனம் லேசாகிவிட்டிருந்தது.

இப்பொழுது அப்பா. எல்லாம் இன்று ஒரு சேர நிகழ வேண்டுமா. ஒவ்வொரு வாரமும் அப்பா வரும் வார இறுதி தான் எங்கள் பண்டிகை தினம். அன்றுதானா இதெல்லாம் நிகழ வேண்டும்.  அம்மாவும் மாமாவும் இருப்பதால் சற்று தைரியம் வந்தது. மீண்டும் நால்வருமாக இன்னொரு இரண்டு மணிநேரம் காத்திருந்து கரைக்க வேண்டியிருந்தது.
டெலிபோன் மணி ஒலித்தது. பாய்ந்து சென்று எடுத்தேன். நம்பிக்கை பொய்க்கவில்லை. அப்பாதான்.
"கவின். அப்பா பேசறேன்"
"சொல்லுங்க டாடி. எங்க இருக்கீங்க"
"லாலிரோடு கிட்ட இருக்கேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துருவேன். சரியா?"
"சரி டாடி. வடவள்ளி வந்துட்டு போன் பண்ணுங்க"
"சரி. வெக்கட்டா"
அப்பா சொன்னதை அம்மாவிடமும் மாமாவிடமும் ஒப்பித்தேன். மீதி உயிரும் திரும்பி வந்தது.
"அப்பா வன்னுட்டாங்க்லா" பிரவின் அவன் மொழியில் கேட்டான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க" என்றதும்
"ஐயா" என்று சிரித்தான்.

சுமார் ஒன்றரை மணி கழித்து அப்பா நடந்தே வந்து சேர்ந்தார். பஸ் கிடைக்காமல் லிப்ட் கேட்டு கேட்டு மாறி வந்ததைச் சொன்னார். பதட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பிய தருணம் அது.

இத்தனை வருடங்கள் கழித்தும் கூட பிப்ரவரி 14 என்றால் இந்த நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை.
எனக்கு அது ஒரு மீண்ட சொர்க்கம் .......

படித்ததும் ரசித்ததும் - 2

காதலர் தினத்திற்கு பொருத்தமான ஒரு கவிதை :-)

ஆதலினால் காதல் செய்வீர்!!

Sunday 13 February 2011

ஹைக்கூ - 1



மறைந்திருந்து பார்க்கும்
மர்மமென்ன
பிறைநிலவு








    

என்றும் வற்றாத
ஜீவநதி
ஏழையின் கண்ணீர்


                                                                      ----  கல்லூரி நாட்களில் எழுதியது



படித்ததும் பதறியதும் - 1

நெஞ்சம் கனக்க வைத்த கவிதை

பின்னோட்டம்

முகத்தில் கீறலும்
பழுப்பான ஆடைகளும்
உடலெங்கும் காயங்களும்
என்று அலங்கோலமாய்
அவர்கள்....

நினைவுகளைப்
பின்னோக்கி இழுத்துப்
பசுமை தடவிக்கொண்டே
அந்த
சிதைந்தப் புகைப்படத்துடன்
நான்.....


Saturday 12 February 2011

விடியாத காலை

சன்னமாய் இமை மடல்களை வருடும் சூரியன்.
தன்னிச்சையாய் நான் இழுக்கும் போர்வைக்குள் புகும்
அம்மாவின் கெஞ்சல்.

சட்டென எழுந்து
அப்பாவுடன் சவரக் கண்ணாடியில் முகம் பார்த்து
இளையவனைத் தட்டி எழுப்பி
காலைக்கடன் முடித்தவுடன்
நுரைத் ததும்பும் காபியின் ஸ்பரிசம் என் கையில்.

காலைப்பனியை நுகர பலகணிக்கு நகர்கிறேன்
இன்றாவது குறி தவறாதா என யோசிப்பதற்குள்
என் காலடியில் குடிபுகும் நாளிதழ்
அதனை புரட்டி முடிக்கையில்
தலை துவட்டிக்கொண்டு அப்பா.

குளியலறைக்குள் நான் நழுவ எத்தனிக்க
என்னை முந்திக்கொண்டு புகுகிறான் என் பிறந்தவன்
ஒருவாறாக ஆயத்தமாகையில்
கடுகு தாளிக்கும் வாசம்.
அவசரமாய் உண்டுவிட்டு வீட்டினின்று கிளம்புகிறேன்.

அண்டைவீட்டு வாசலில்த் தெளிக்கும்
 நீருக்குத் தப்பித்து
அழகழகாய்ப் பூத்திருக்கும்
கோலங்களைத் தாண்டிக்குதித்து
முதுகில் அழுத்தும் புத்தகப்பையை சரிசெய்து
நடையைத் தொடர்கிறேன்.

ஆவியினின்று ஆடை விலக்கும்
பாட்டிகடை இட்டிலி
வாகனம் கொள்ளாத சாமான்களின்
மீதமர்ந்து ஒய்யாரமாய் பவனி வரும்
மளிகைக்கடைக்காரர்
நாசிக்கு இதமாக
பூக்கடையின் மல்லிகை மணம்.

இவற்றை கடக்கையில்
சட்டென
நினைவுகள் அகல
கனவு கலைய
மீண்டும் போர்வைக்குள் நான்.

திரைசீலையை விலக்கிப்
பார்க்கிறேன்
இன்னும் விடியாத
அயல்நாட்டு காலைப்பொழுதை
எதிர்நோக்கி.......


கிறுக்கல்

கவிஞனாம் அவன்.
அவன் கவிதை எழுதத் துணிகிறான்

கருத்துக்களுக்கு மணமுடிக்க
வார்த்தைகளை மாலையாய்க் கோர்க்கிறான்
அந்தோ
ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்ட எழுத்துக்கள்
தனித்தனியே

மோனைகள் மௌனமாய்ப் போர்புரிய
எதுகையோ ஓடுகிறது சிரம் தெறிக்க

எதற்கிந்த சிரமம்?
நவயுகக் கவிதை ஒன்று முளைத்தது

அதையோ
தமிழென்று உணர்ந்துக்கொள்ள மிகக் கடினம்
இலக்கணமோ பிழையுடனே இழையோடுகிறது
அதில் ஒரு தலைக்கனம்
அவனுக்கு

தலைப்பிட்டான் "கிறுக்கல்" என.
வெறும்
கிறுக்கல்களாய் காகிதத்தில்....


Sunday 6 February 2011

கொங்கு தமிழ் வாசம்

துள்ளுதமிழ்த் தேடிக்கொண்டிருந்த வேளையில் என் நெஞ்சிற்கினிய கொங்குதமிழ் என்னைத் தழுவிற்று. கீழ்காணும்ச் சுட்டியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கொங்கு வட்டார வழக்குச் சொற்கள் என்னை பல்லாயிரம் மைல்களைக் கடந்து கோவை தெருக்களில் விட்டுவிட்டதைப் போன்றதொரு உணர்வு.

http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post_25.html#links

ஒவ்வொரு வார்த்தையைப் படிக்கும் பொழுதும் அதை யாரிடத்தில்க் கேட்டேனோ அந்த நினைவுகள் வலியச்  சென்று ஆழ் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கின்றன. அண்மையில் என் கொங்குதமிழ் வாசம் வீசுகிறது. நுகர்கிறேன். அது தரும் பழைய நினைவுகளைப்  பருகுகிறேன். போதைத் தருகிறது. அனுபவிக்கிறேன். இந்த உணர்வு புதுமையானது. தென்றலை நேரில் நின்று அனுபவிப்பது ஒரு சுகம். அதே தென்றல் மனதினுள் வருடுவது முற்றிலும் புதிய சுகம்.
இன்னும் என் தெருக்களில் பயணித்துக் கொண்டு இருக்கிறேன், பழைய நினைவுகளை அசை போட்டபடி. இது கொங்கு நினைவுகள். அதை கோர்க்கிறேன் ஒரு மாலையாக. அது பின்வரும் காட்சியாக விரிகிறது.



"சித்த இரு கண்ணு. நான் மேலுக்கு தண்ணி வாத்துட்டு இதா வந்தர்றேன். நீ சீராடாம வட்டல கொண்டு வை கண்ணு சோறு உங்கலாம்"னு ஆத்தா பாத்துரூம்புக்குள் நுழைகிறாள்.
"அரமாலும் கொஞ்சமா திங்கிறியே கண்ணு. நல்லா உண்டாத்தான வலுவிருக்கும்"னு கரிசனம் காட்டுகிறார் தாத்தன்.


ஆத்தாவும் தாத்தாவும் பழமை பேசுகிறார்கள்.
"சின்னக்கண்ணு பண்ணாடி சனிக்கெழம பொழுதோட தான் வருவாரு. அவீய வர்ற வரைக்கும் புள்ள தனியாத்தான இருக்கும். அதான் ஒரே வெசனமா இருக்கு. அன்னாடும் இங்க வந்துட்டு போறதுக்கு ஆகுமா "
அப்போ சிறுசு ஒன்று கண்ணை கசக்கி கொண்டு வருகிறது.
"ஆத்தா ராஜேசண்ணன் அச்சு முருக்க புடுங்கிட்டு கொக்காணி காட்டுது ஆத்தா"  விக்கி விக்கி அழுதுகொண்டே.
"சரி சரி எஞ்சாமி. போச்சாது போ. நான் அவன என்னனு கேக்குறேன். டே ராசேசு. எண்டா புள்ள கூட ஒரியாடற. புள்ள பொக்குனு போச்சு பாரு. குடுறா புள்ள கிட்ட. அம்மா ஆள. நீ போய் வாங்கிக்க சாமி"


வாசலில் மணி மாமா
"ஏனம்மா ஐயன் இருக்கறாருன்களா?"
"வா மணி. வா சோறு உங்கலாம்"
"இல்லை இருக்கட்டுங்க. இன்னொரு நாள் சாவகாசமா வர்றேங்க"
"ஊட்டுல அம்மணி நல்லா இருக்குதா? சிட்டாளு?"
"நல்லா இருக்கறாங்க"
"பொறவு என்ன சமாச்சாரம்"
"ஒன்னுமில்லீங்க மேக்கால வீட்ல ஒரு சோலிங்க. பாதைக்கு குறுக்கால ஏதோ சாளை போட்டுட்டு எதுத்த வீட்டுக்காரன் பண்ணாட்டு பன்றானாமா. அதான் அய்யன கூட்டிட்டு போய் என்னனு கேக்கலாம்னு"
"அனாமத்த போகுதேன்னு அவன் பொழங்கரானா. அந்த கொல்லைல போறவன சீவக்கட்டைலயே போடோணும். போன வாரங்கூட தண்ணிய போட்டுட்டு இங்க வந்து ஒரே ரவுசு"
"அமாம்ங்க அவன் ஒரு மசையன். எந்நேரமும் ஒரே அக்கப்போரு"
"வெளிய வெய்ய காந்துது. கொடை எடுத்துட்டு போங்க. இந்தா வரும்போது சுருளு வாங்கிட்டு வாங்க. பொழுதானா சொள்ளை கடி தாங்கல"
கிளம்புமுன் தாத்தன் "டே சாமிகளா. ஒன்னுக்கொன்னு எசிரி போடாம பொட்டாட்டம் தூங்கோனும். என்ன?" என்று விட்டு கிளம்புகிறார்.


"என்ன ஆத்தா. தாத்தன் எங்கியோ போகுது?" கேட்டு கொண்டே வருகிறார் பாப்பாத்தி அக்கா.
"தாத்தனுக்கு சோலியிருந்தா கெட தங்குமா?"
"ரேசன் கடைல இன்னைக்கு சீமத்தண்ணி ஊத்தறாங்கத்தா. நீ வரல?"
"அடே மறந்தே மறந்துட்டேன். செத்த இரு. ஓட்டுக்க போகலாம்"
"சீல புதுசா?"
"அக்காமாத்தா எங்க மச்சாண்டார் பெஞ்சாதி நோம்பிக்கு எடுத்து குடுத்திச்சி. சரி இந்தாத்தா கோசாபழம்"
"இது ஏது"
"நம்ம அம்மிணியக்கா கடையில வாங்கியாந்தேன்"
"இந்த கீரைக்கார அம்மிணிய பாத்தியா?"
"இல்லையாத்தா அவளுக்கென்ன நோக்காடோ இன்னிக்கி காணோம்"
"தண்ணி வந்துதே இன்னிக்கு. புடுச்சி வெச்சுட்டியா?"
"ஆங். மூணு தோண்டில சாலுலயும் புடுச்சிட்டேன்."
அப்பொழுது பின்னொரு சிறுசு அருவாமனை அருகில் செல்ல
"டே சாமி. அருவாமனை. அக்கட்ட போ" என்று அதட்டுகிறாள்.

நினைவு கலைகிறது. காட்சி அகல்கிறது. கண்களில்த் துளிர்த்த கண்ணீர் நான் அடக்கியமையால் நெஞ்சினுள் நிறைகிறது.

இன்னும் பயணிக்கிறேன்.

அம்மா அடிக்கடி சொல்லும் "உம் பொறந்தவன கேளு"
கதிர் அண்ணனின் "மம்மானிய" தூக்கம்
பிரகாசின் "எத்தாச்சோடு வீங்கியிருக்கு"
மாமன் மகனில் நடுவலவன் ஜெகியின் "என்னடா உன்னோட ஒரே அக்கப்போரா இருக்கு"
அப்பாவின் "இந்த சொம்புல அண்ணாந்து குடிக்க முடியுதா"
பாட்டியின் "யாருடா இவன் திருவாத்தானா இருக்கான்"
தாத்தாவின் "மொள்ள சாமி மொள்ள"
ஆத்தாவின் "ராத்திரி பூரா ஒரே பெனாத்தலு"

இன்னும் ஏராளம் ஏராளம்.

இன்னும் நடந்துகொண்டே இருக்கிறேன் என் தெருக்களில்


கொங்கு தமிழ்க்கென்று ஒரு தனி அழகு. கொங்கு தமிழ் என்றில்லை, அனைத்து வட்டார மொழிக்கும் அதனுடைய தனிச்சிறப்பு என்றும் உண்டு. இன்று நகர்ப்புறத்தில் அது சற்று தொய்வடைந்த போதிலும் கிராமப்புறங்களில் அது தொன்மை மாறாமல் தான் இருக்கின்றது. திரைப்படங்களில் பெரும்பாலும் கொங்கு தமிழ் வழக்கு மிகுந்து வருவதில்லை. அதை கொடுக்க நினைப்பவர்களுக்கும் அதன் ஆக்கம் தெரிவதில்லை. வெறும் "லே" வருவதனால் மட்டும் அது நெல்லைத் தமிழ் ஆகாது. வெறும் "அங்கிட்டு இங்கிட்டு" திண்டுக்கல் தமிழ் ஆகாது. "வந்தாய்ங்க போனாய்ங்க" மதுரை தமிழ் ஆகாது. அது போல வெறும் "ங்க" மட்டும் கொங்குத்தமிழ் ஆகாது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலர் இருந்த போதிலும் குறிப்பிட்ட சிலரே அதன் வாசம் மாறாமல் காப்பாற்றுகின்றனர்.


கீழ்க்காணும் சுட்டியில் கமலஹாசனின் கற்றுணர்ந்த கொங்குதமிழை விட சரளாவின் வாழ்வோடு கலந்த கொங்குதமிழில் அதிக ஜீவன் இருப்பது தெரியும்.

மற்றும் ஒரு சரளாவின் கொங்கு தமிழ்

அதே போல் கவுண்டரும் மணிவண்ணனும் 


இலக்கியத்தில் கொங்கு தமிழை அதிகம் வாசித்ததில்லை. யாருக்கேனும் அதன் பரிச்சயம் இருந்தால் எனக்கு சற்று அறிமுகப்படுத்தமுடியுமா?

பிரியமான பிரிவு

என் உதடுகள் பிரிந்தன
         உன்னுடன் மகிழ்ந்து சிரிக்க....

என் கரங்கள் பிரிந்தன
         உன் விரல்களைப் பிடிக்க....

என் இமைகள் பிரிந்தன
         உன் முகம் கண்டு ரசிக்க....

என் கால்கள் பிரிந்தன
         உன்னுடன் இறுதிவரை நடக்க....
         

தொலை(ந்த) பேச்சு

ஊருக்குத் தொலைபேசுகிறேன்

அம்மா கூறுகிறாள்
"தாத்தாவுக்கு உடல் நலம் சரியில்லை" என்று.
இயலாத பதட்டத்துடன்
"அடடே அப்படியா. இப்பொழுது பரவாயில்லையா?" நான்.

அப்பா கூறுகிறார்
"------க்கு குழந்தை பிறந்திருக்கிறது. அவ்வளவு அழகு" என்று.
செயற்கை வியப்புடன்
"ஓ. அருமை. யாரைப் போல இருக்கிறது?" நான்.

இளவல் கூறுகிறான்
"இந்த பிறந்தநாளுக்காவது நீ இங்கு இருந்திருக்கலாம். பச்" என்று.
வறண்ட சிரிப்புடன்
"அதனால் என்ன. புதுச் சட்டையில் எடுத்த புகைப்படம் அனுப்பு" நான்.

நான் கூறுகிறேன்
"இன்னும் ஆறு மாதங்கள் என் வேலை நீட்டிக்கப்படும் போல தெரிகிறது" என்று.
நீண்ட அமைதியுடன்
"ஓ அப்படியா. உன்னை இப்பொழுதே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது" அவர்கள்.




Saturday 5 February 2011

ஒரு வார்த்தை

ஒற்றை வார்த்தையில்
உன்னை விவரிக்கச் சொன்னாய்.

யோசித்தேன்.
எனக்குக் "குழப்பம்"தான் மிஞ்சியது.


ஆட்டோக்ராப்

















     நினைத்துப் பார்த்தேன்
அன்றலர்ந்த பூவாய் நினைவுகள்

எழுத நினைத்தேன்
கண்ணீர் துளிகளாய் எழுத்துக்கள்

உறங்கத் துடித்தேன்
பிரிவுப் படுக்கையில் முட்கள்

நட்பை அழைத்தேன்
கடந்ததைக் கூறின நாட்கள்

     - கல்லூரி இறுதி நாட்களில் எழுதியது

Thursday 3 February 2011

பெண்ணாதிக்கம்


"பொண்ணுங்க மனசு பேண்ட் சைஸ் மாதிரி
அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கும்
பசங்க மனசு சட்டை சைஸ் மாதிரி
எப்பவாவது தான் மாறும்"

அது என்னவோ வலைபதிவில் எழுத ஆரம்பித்ததில் இருந்து இது போன்ற லாஜிக் இல்லாத பல விஷயங்கள் தோன்றி இம்சிக்கின்றன. அதுவும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கும் பொழுதுதான் இவை என்னை புரட்டி புரட்டி எடுக்கிறது. இதுகாரும் பார்த்த தமிழ் சினிமாக்களின் பாதிப்பாகக்கூட இருக்கலாம். "அப்படியே இருந்தாலும் எப்படி நீ இப்படி யோசிக்கலாம்" என்று மகளிர் அணி உடனே பதறிக்கொண்டு என்னைப் பந்தாட புறப்பட வேண்டாம். நான் எழுத வருவது இதை பற்றி அல்ல.

பெண்கள். "இஞ்சினியரிங் படிப்பும் பொண்ணுங்களும் ஒன்னு. எவ்வளவு படிச்சாலும் புரியாது". சென்ற காலங்களில் பெண்களைப் பற்றி என்னிடம் கேட்டால் என்னுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும். பெண்கள் மீது ஒரு பத்தாம்பசலித்தனமான கண்ணோட்டத்தையே இந்த சமூகம் நமக்கு கொடுத்திருப்பதாக உணர்கிறேன். பெண்கள் மீதான பார்வை சற்று மேலோட்டமானதாகவும் அடிப்படை இல்லாததாகவும் இந்த சமூகம் சித்தரித்து வந்திருக்கிறது. பெண் என்றால் பரிதாபத்துக்குரியவள், வெகுளி, அடிமைப்படுத்தப்பட்டவள் என்று காலங்காலமாக ஆண்களுக்கு போதித்ததோடல்லாமல் பெண்களையும் நம்ப வைத்து மழுங்கடித்திருக்கின்றது இந்த சமூகம். உண்மை என்னவென்று சற்று ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு தவறு என்று விளங்கக்கூடும்.

இன்று பெண்களுடைய அதீத வளர்ச்சி பற்றி பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருகின்றனர். எது வளர்ச்சி? ஆணுக்கு போட்டியாய் எல்லாவற்றிலும் சரிசமமாய் விளங்குவதா வளர்ச்சி. 33 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாய் முன்னேறினால் தான் வெற்றியா?  யார் ஆணை ஒரு இலக்காக நிர்ணயித்தது? ஆணை ஜெயிப்பது தான் பெண்ணின் பிறவிப்பயன் போல இன்று பெண்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெண்ணுக்கு என்று தனித்தன்மை கிடையாதா. பெண்களுடைய தனித்தன்மைகளை பட்டியலிட்டால் ஆண் 3.3 சதவிகிதம் கூட நெருங்க மாட்டான். பெண்கள் இயங்கும் தளம் வேறு. ஆண்கள் இயங்கும் தளம் வேறு. பெண்ணும் ஆணும் அவரவர் தளத்தில் வெற்றிகரமாக இயங்க ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டுமே ஒழிய ஒருவர் தளத்தில் மற்றவர் இயங்க முற்படுவது எப்படி சரியாகும். ஆணைப் போல உடையணியலாம், வேலைகள் செய்யலாம், அரசியல் நடத்தலாம், இன்னபிறவற்றையும் செய்யலாம். ஆனால்அது குரங்கைப்பார்த்து மயில் மரத்துக்கு மரம் தாவும் முயற்சியே தவிர முன்னேற்றம் இல்லை. விபரீதம்.
 

படித்ததும் ரசித்ததும் - 1