Sunday 30 January 2011

சிகையலங்காரம்

சற்று முன்பு தான் சிகை திருத்திக் கொண்டு வந்தேன். திருத்தி விட்டவர் இஸ்தான்புல்காரர். ஒரு ஐந்தாறு முறை அவரிடம் தான் முடி வெட்டிக்கொண்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக வெட்டி விடுகிறார். விதவிதமாக என்றால் நன்றாக இருக்கிறதா இல்லையா? அதற்கு மட்டும் எனக்கு பதில் தெரிந்ததே இல்லை. இவரிடம் என்றில்லை. சிறு வயதில் இருந்தே. எனக்கு நினைவு தெரிந்து பலர் என் தலையில் கை வைத்து தொழில் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆலமரத்தடியில் ஈயோட்டியவர், பெட்டிக்கடை பார்பர், ஐந்து ரூபாய்க்கு வெட்டுபவர் இப்படி பலர்.

அம்மாவின் ஒரே கோரிக்கை, முடி வெட்டுவதென்றால் "ஒட்ட நறுக்க" வேண்டும். இப்படி ஒரு சிம்பிள் கோரிக்கை என்பதால் ஆலமரத்தடிக்காரரே போதும் என்றாகிவிட்டது. மொட்டையடித்து இரண்டு வாரமானால் எப்படி இருக்குமோ அப்படி ஸ்டைலாக வெட்டி விடுவார் நமது ஆலமரத்தடிகாரர் . நன்றாக சட்டியை கவிழ்த்து வைத்தது போன்று (சமீப காலமாக இது நிஜமான ஸ்டைலாக மாறிவிட்டதில் ஒரு அல்ப சந்தோஷம்). இந்த வைபவத்திற்கு என்னை அழைத்து செல்லும் கதிர் அண்ணனும் மூர்த்தி அண்ணனும் இதற்கு உடந்தை. இது போல பலபேர் விளையாண்ட சிகை என்பதால் இப்படித்தான் வெட்டி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் "ஒட்ட நறுக்க"ப்பட்டு விட்டது.

வீட்டிற்கு அருகில் ஜோதி அண்ணன் வந்ததால் மேற்கூறிய அவலம் சற்று குறைந்தது. ரசனைவாதியான அவரிடம் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என்னை ஒப்படைத்து விட்டிருந்தேன். கல்லூரி முடித்து பெங்களூர் சென்ற பிறகும் கூட அவர்தான். எனக்கு எப்படி வெட்ட வேண்டும் என்பது அவருக்கும் அவர் தம்பி சம்பத் அண்ணனுக்கும் தெரிந்திருந்ததால், இப்படிதான் வெட்ட வேண்டும் என்று கூற எனக்கு வாய்ப்பு வந்ததில்லை. முதல் இங்கிலாந்து பயணத்தில் தான் அந்த தேவை முளைத்தது. ஊரில் ஆலமரத்தடிக்காரர் என்றால் இங்கு ஒரு பாகிஸ்தான்காரர். கவிழ்த்த சட்டி கட்டிங் தான். ஆனால் சற்றே அதிகமாக முடி இருக்கும். அது தான் ஒரே வித்தியாசம். கோவைக்கு சென்றால் ஒபராய்க்காரர்களிடம் சற்று திருத்திக்கொண்டால் தான் நிம்மதியாய் இருக்கும் (வீடு மாறி விட்டதால் கடை மாற்றம்).

இது போல எப்படி வெட்ட வேண்டும் என்று சொல்லத்தெரியாமல் போனதிலும் ஒரு நன்மை. ஏழு மாதங்கள் ரொமேனியாவில் குப்பை கொட்ட வேண்டிய  கட்டாயம் வந்தது. மொழி தெரியாத ஊர். ஆங்கிலம் தெரியாத மக்கள். குடியிருந்த வீட்டருகில் ஒரு சலூன். முடி வெட்டுவது அறுபது வயது பாட்டியம்மா. கேட்கவா வேண்டும். அங்கு செல்லும் முன் அவ்வூர்க்கார நண்பர்களிடம் மீடியமாக வெட்டுவதென்றால் என்ன கூறுவதென்று மட்டும் ரோமேனியன் மொழியில் கேட்டுச் சென்று வெட்டிய அழகுதான் கீழே உள்ள புகைப்படத்தில் காணப்படுவது.

அந்த பாட்டியம்மா வேறு என்னவெல்லாமோ கேட்டார். எழவு நமக்கு புரிந்தால்தானே. எல்லாவற்றிற்க்கும் தலையாட்டிக்கொண்டு வந்ததன் விளைவு தான் இது.

http://www.youtube.com/watch?v=wgYT9k4W06Y&feature=related
மேலே உள்ள சுட்டியில் கவுண்டர் கூறுவது போல தான் என் நிலைமை.
 "ஆலமரத்தடிக்காரர் சரியில்லைன்னு அஞ்சு ரூவா பார்பர் கிட்ட வெட்டினேன். பாகிஸ்தான் பார்பர் சரியில்லைன்னு இஸ்தான்புல் பார்பர் கிட்ட வெட்டினேன். இப்போ எப்படி வெட்டணும்னு எனக்கும் தெரியல இவனுகளுக்கும் தெரியல" :-)

No comments:

Post a Comment