Monday 3 January 2011

டேப் கேசட்

"டேய் இந்த பக்கம் முடிஞ்சுதுனா கேசட்ட திருப்பி போடு. நான் குளிச்சிட்டு வரேன்"
அப்பா வழக்கமாக சொல்வது. டேப் கேசட்டில் பதிவு செய்து டேப் ரிக்கார்டரில் கேட்கும் அந்த இசையின் சுகம் ஒரு தனி வகை. தொலைக்காட்சியிலும் வெளியிடங்களிலும் அரைகுறையாய் கேட்ட பாடல்களை தேர்வு செய்து, அதை காகிதத்தில் எழுதி வைத்து, அதிலும் குறைந்த பட்சம் 12 பாடல்கள் சேர்ந்த பிறகு அந்த பாடல்களை கேசட்டில் பதிவு செய்து கேட்கும் பொழுது வருமே ஒரு நிறைவு. அடடா.

AM ராஜா முதல் இளையராஜா வரை அப்பா எனக்கு அடையாளம் காட்டியது இது போன்ற கேசட்டுகளில் தான். அவர் சேமித்து வைத்திருந்த கேசட்டுகள் அடங்கிய பெட்டி முன்பு கர்மசிரத்தையாய் அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து, அதில் ஒன்றை தேர்வு செய்து ஒலிக்கச் செய்யும் காட்சி அப்படியே என் கண்முன் நிழலாடுகிறது. நீண்ட நாட்கள் ஒலிக்கப்படாமல் வைத்திருக்கும் கேசட்டுகள் சில சுழலாது சற்று இறுக்கமடைந்து இருக்கும். அதன் மையத்தில் விரல் விட்டு அதனை சுற்றி விட்டு பின்பு ஒலிக்கச் செய்வார்.

அப்பாவிடம் இருந்தவை வெறும் கேசட்டுகள் இல்லை. அவை தாங்கிய இசையையும் தாண்டி பலவற்றை பறைசாற்றுவதாக இருந்தது. அது பதிவு செய்யப்பட்ட பதிவுக்கூடம் அங்கிருப்பவர்களுடன் அப்பா கொண்டிருந்த நட்பு, பாடல் தெரிவு செய்த காலநிலை என்று பலவற்றை கூறும் நினைவு சின்னங்களாகவே இருந்தது. ஒரு கேசட்டில் பதிவு செய்யப்படும் இசையின் செறிவு அதை பதிவு செய்பவர் ரசனையை பொறுத்து இன்னும் பன்மடங்காகும். பதிவு செய்பவர் நமது அலைவரிசையை சேர்ந்தவராக இருக்கும் பொழுது சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பாடல் ஒலிக்கும் பொழுதும் அதன் பின்னணியில் உள்ள செய்திகளும் , அதற்கு தொடர்புடையவர்களை பற்றிய நினைவுகளையும் அப்பா கூறுவதை கேட்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

அப்பாவின் இசை ரசனை சற்று அலாதியான ஒன்று. ஒரு கேசட்டில் உள்ள அனைத்து பாடல்களும் ஒரே விதமான மனநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்புவார். விவரம் அறிந்த சிறு வயதில் நான் பாடல்களை தெரிவு செய்யும் பொறுப்பை (?) ஏற்று கொண்ட பொழுது, சொதப்பலான பாடல்களை புகுத்து பல முறை அப்பாவிடம் வாங்கிக்கட்டிகொண்டதுண்டு. அந்த பாடல்கள் ஒலிக்கும் பொழுது அவ்வப்போது டோஸ்கள் புதுப்பிக்கப்படுவதும் உண்டு.

இன்றும் சில பாடல்களை கேட்டு முடிக்கும் தருவாயில் என்னையும் அறியாமல் நான் கேசட்டில் கேட்டு பழக்கப்பட்ட அடுத்த பாடல் என் நினைவில் வரும். அதன் சுகமான மேற்கூறிய நினைவுகளையும் சேர்த்து.

No comments:

Post a Comment