Monday 31 January 2011

நண்பனாய் நான் உனக்கு

"காதலித்தவளை பிரிய நேரிட்டதடா.
தோல்வியுற்றேன்" என்றாய்.
எதிர்பார்த்தேன்.
இது நடந்துவிடக் கூடாதென்று.
நடத்திக்காட்டியது விதி.

போரிட்டது
பாசமும் நேசமும்
பணிந்தது
காதலும் விருப்பும்

"கூறினேன் அன்றே. கேட்கவில்லை நின்றே"
உன் மீது குற்றம் சுமத்தலாம்.
நான் குற்றமற்றவனாக இருந்தால்.

ஜோடிக்கிளிகள்
ஆடித்திரிந்தது கண்டு
பாடிக்களித்ததில் பொய்யில்லை

அகமதில் மகிழ்ந்திருந்தும்
அதை வெளிக்கொணரா
முகமதில் மெய்யில்லை

கற்பனைகள் ஆயிரம்
கனவுகள் ஈராயிரம்
வடிக்கவிருந்தேன் பா ஆயிரம்
மனமின்று
சுக்குச்சுக்காய் நூறாயிரம்

"அது எப்படி?
காதலித்தவன் நான்.
பிரிந்தது காலத்தின் கட்டாயம்.
நியாயப்படி கவலை என்னுடையது.
உனக்கு என்ன?" கேட்கலாம் நீ.

தாய் பிள்ளையை பெற்றெடுக்க
ஆவலுடன் காத்திருந்த
தந்தையின் நிலையடா என்னது.

சுமந்த வலி அறியாமல் இருக்கலாம்
பிரிந்த வலி உணராமல் என்ன?

விதையை தொலைத்தவன் கண்ணீர்
என் கண்களில் ஈரமாய்

விதையை விதைத்து
விதைத்தது விளைந்து
விளைந்தது பூத்து
பூத்தது காய்த்து
காய்த்தது கனிந்து
அக்கனியையும் தொலைத்த
உன் கதறல்
என் செவிகளில் முள்ளாய்
என் சிந்தையின் கசப்பாய்
என்றும்

உன் காதலை
நான் காதலித்தேனடா.

தோல்விதான் எனக்கும்.

                                     -  என்றோ எழுதியது

No comments:

Post a Comment