Sunday 6 February 2011

தொலை(ந்த) பேச்சு

ஊருக்குத் தொலைபேசுகிறேன்

அம்மா கூறுகிறாள்
"தாத்தாவுக்கு உடல் நலம் சரியில்லை" என்று.
இயலாத பதட்டத்துடன்
"அடடே அப்படியா. இப்பொழுது பரவாயில்லையா?" நான்.

அப்பா கூறுகிறார்
"------க்கு குழந்தை பிறந்திருக்கிறது. அவ்வளவு அழகு" என்று.
செயற்கை வியப்புடன்
"ஓ. அருமை. யாரைப் போல இருக்கிறது?" நான்.

இளவல் கூறுகிறான்
"இந்த பிறந்தநாளுக்காவது நீ இங்கு இருந்திருக்கலாம். பச்" என்று.
வறண்ட சிரிப்புடன்
"அதனால் என்ன. புதுச் சட்டையில் எடுத்த புகைப்படம் அனுப்பு" நான்.

நான் கூறுகிறேன்
"இன்னும் ஆறு மாதங்கள் என் வேலை நீட்டிக்கப்படும் போல தெரிகிறது" என்று.
நீண்ட அமைதியுடன்
"ஓ அப்படியா. உன்னை இப்பொழுதே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது" அவர்கள்.




No comments:

Post a Comment