Friday 25 February 2011

இளையராஜா

இந்த இசை அரசனின் இசையலைகள் புரட்டிப் போட்ட கோடானு கோடி சிப்பிகளில் நானும் ஒருவன். இசை ஞானம் இல்லாதவரையும் இழுத்துத் தன்னுடன் பயணிக்க வைக்கும் அந்த சக்தி. எத்தனை பாடல்கள். அடேயப்பா. மனதின் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுண்டி இழுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள். 


இசையைப் பற்றி என்ன தெரியும் என்று என்னைக் கேட்பீர்களானால் - இளையராஜாவின் இசையை ரசிக்க நன்றாகத் தெரியும் என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த இசையைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. தத்து பித்தென்று எதையாவது எழுதிவைக்க மனம் ஒப்பவில்லை. நுணுக்கமாக எழுத எனக்கிருந்த இசைஅறிவு போதுமானதாகத் தோன்றவில்லை. எழுதாமல் விட்டது எவ்வளவு நல்லதாகிவிட்டது என்பதை கீழ்காணும் பதிவைக்கண்டவுடன் விளங்கிவிட்டது.

ரவி ஆதித்யா: இளையராஜா- King of Enchanting Violins-1

கண்டிப்பாக இவ்வளவு சிரத்தையுடன் என்னால் எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. அற்புதம். பல பாடல்களில் பொதிந்திருந்த வயலின் interlude களை அவ்வளவு அழகாக பதிவு செய்து இருக்கிறார்.
இதைப்படித்தவுடன் சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அதைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தான் இந்த பதிவு.

சிறுவயது தொட்டு திரையிசையை ரசித்து வருபவன் தான். இருப்பினும் சமீபகாலமாக அயல்நாடு தந்த தனிமை, இசையுடன் இன்னும் நெருங்கி உலா வர வாய்ப்பாக அமைந்தது. வீட்டில் பெரிய ஸ்பீக்கர்களில் கேட்கும் பொழுது புலப்படாத பல நுணுக்கமான இசைகளை ஹெட் போனில் கேட்கும் பொழுது தான் ரசிக்க முடிந்தது. அதுவும் நம் இளையராஜாவின் இசை என்றால் ஆங்காங்கே சிறு சிறு இசைத்துணுக்குகள் ஒளிந்திருக்கும். அமைதியான இரவுகளில் இளையராஜாவின் இசை தரும் சுகத்தை உணர மட்டும்தான் முடியும். அப்படி ஊன்றி கவனிக்கும் பொழுதுதான் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை உணரமுடியும். அந்த வேறுபாட்டில் ஒன்று தான் ரவி அவர்கள் பதிவில் விவரிக்கப்பட்டிருக்கும் வயலின் உபயோகம். இளையராஜாவின் இசைக்கோர்வை (music composition) அவரின் மற்றொரு தனித்தன்மை.



இசைக்கோர்வையை விமர்சிக்கும் அளவுக்கு அறிவு போதாது எனினும், இளையராஜா இசைக்கும் மற்ற இசையமைப்பாளர்கள் இசைக்கும் உள்ள வேறுபாட்டை எப்படியோ என்னால் இனம்காண முடிகிறது. இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? இருக்கலாம். உதாரணமாக இதுநாள் வரையில் இளையராஜா இசையமைத்ததாக நம்பப்பட்டு வந்த பல பிரபலமான பாடல்கள் வேறு இசையமைப்பாளர்களுடையது என்பதை தனித்துவம் வாய்ந்த இசைக்கோர்வையோ இல்லை ஏதோ ஒன்று எனக்கு உணர்த்திற்று.

80 களிலும் 90 களிலும் வெளிவந்து வெற்றி பெற்ற எல்லாப்பாடல்களுமே இளையராஜாவினுடையது தான் என்று பலர் உட்பட நானும் நம்பியிருந்தேன். 

இதயத்தாமரை படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் இளையராஜாவினுடையது அல்ல என்று எனக்கு உணர்த்தியது எதுவென்று தெரியவில்லை. விசாரித்துப் பார்த்ததில் சங்கர்-கணேஷாம்.



அதேபோல் 
இந்தப் பாடல் சந்திரபோஸ் இசையமைத்தது.

மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இந்த பாடலுக்கு இசை தேவேந்திரன்.

இப்படிப்பல பாடல்கள். மேற்குறிப்பிட்ட பாடல்களில் எந்த குறையும் இல்லை. இளையராஜாவின் டச் இல்லை என்பதே நான் உணர்ந்தது. ஒருமுறை இளையராஜா குறிப்பிட்டார் -  "இசை என்பது ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதியதாய் தோன்ற வேண்டும்" என்று. எவ்வளவு உண்மை. இதுதான் இளையராஜாவின் அந்த டச். வெறும் ரயில் சிநேகமாய் முடிந்து போகாமல் உற்ற நண்பனைப் போன்றது இளையராஜாவின் பாடல்கள்.

எந்த சூழலிலும் நம்மை ஆட்கொள்ளும் இசையைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அனைவரும் அறிந்த ஒன்றை மீண்டும் வழிமொழிகிறேன்.

No comments:

Post a Comment